செய்திகள்
ராமநத்தம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

ராமநத்தம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2021-02-08 15:20 GMT   |   Update On 2021-02-08 15:20 GMT
ராமநத்தம் அருகே முறையாக குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராமநத்தம்:

ராமநத்தம் அருகே தொழுதூர் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி அருகே உள்ள தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் தொழுதூர்-ஆத்தூர் சாலையில் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோாிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார், ஊராட்சி தலைவர் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News