செய்திகள்
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் ஆரணியை சேர்ந்த மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது
உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்தில் ஆரணியை சேர்ந்த மேற்பார்வையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மதூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 4-ந்தேதி ஏற்பட்ட பாறை சரிவில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பலியானார். அந்த விபத்தில் சிக்கிய மற்ற 9 பேரை மீட்புப்படையினர் உயிருடன் மீட்டனர்.
அதில் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வட மாநிலத்தை சேர்ந்த சோனா அன்சாரி (வயது 32) நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
சுரேஷ் (30) செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அந்த கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (36) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் ஏலக்காய் மங்கலம் கிராமத்தை சேர்ந்த மேஸ்திரி வேலு (47) ஆகியோரை சாலவாக்கம் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.