செய்திகள்
சாத்தூர் பஸ்நிலையத்தை படத்தில் காணலாம்.

சாத்தூர் பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படுமா?

Published On 2021-01-25 05:41 IST   |   Update On 2021-01-25 05:41:00 IST
இட நெருக்கடியை சமாளிக்க சாத்தூரில் உள்ள பஸ்நிலையத்தை விரிவாக்க செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்:

சாத்தூரில் அண்ணா பவளவிழா பஸ்நிலையம் செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த பஸ்நிலையம் அந்த காலகட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கீட்டின்படி கட்டப்பட்டது. பிறகு 1984 மற்றும் 2,000 ஆயிரம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.

ஆண்டுகளும் கடந்து விட்டன. மக்கள் தொகையும் பெருகியும் விட்டது. ஆனால் தற்போது வரை இந்த பஸ்நிலையம் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

இந்த பஸ்நிலையத்தில் இருந்து விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, நடுவப்பட்டி, இருக்கன்குடி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி விளாத்திகுளம், நாகலாபுரம், உப்பத்தூர், கரிசல்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், வெற்றிலையூரணி, தாயில்பட்டி, ஆலங்குளம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும் இந்த பஸ்நிலையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன.

பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுவதால் அதிக அளவில் பொதுமக்கள் இங்கு வருகின்றனர். அதேபோல இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து தான் பஸ் ஏறி செல்கின்றனர்.

இவ்வாறு முக்கியத்துவம் உள்ள பஸ்நிலையம் இட நெருக்கடியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதால் இட நெருக்கடியால் பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே தற்போது உள்ள மக்கள் தொகை கணக்கீட்டின் படி இட நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த பஸ்நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும். அவ்வாறு விரிவுபடுத்தும் போது நவீனமயமாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News