செய்திகள்
உட்காருவதற்கு இருக்கை வசதி இல்லாததால் தடுப்புச்சுவரில் அமர்ந்து இருப்பவர்களை படத்தில் காணலாம்.

வெம்பக்கோட்டை அணையில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2021-01-24 13:10 GMT   |   Update On 2021-01-24 13:10 GMT
வெம்பக்கோட்டை அணையில் சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி:

மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகி வரும் வைப்பாற்றின் குறுக்கே காயல்குடி ஆறு கலக்கும் இடத்தில் விவசாயத்திற்காக எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வெம்பக்கோட்டை அணை கட்டப்பட்டது.

இந்த அணையில் உள்ள உபரிநீர் சிவகாசி நகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகமாக செய்யப்படுகிறது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த அணை இயற்கை சூழ்ந்த பகுதியாகும்.

இந்த அணை நுழையும் இடத்திலிருந்து எல்லை வரை ஏராளமான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.

காற்றோட்டம் உள்ள ரம்மியமான சூழ்நிலையில் இந்த அணைக்கு வரும் பொதுமக்கள் உட்காருவதற்கு போதுமான இருக்கை வசதி, குடிநீர்வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

தற்போது அணையி்ல் தண்ணீர் இருப்பதால் எண்ணற்ற பேர் வருகின்றனர். எனவே இங்கு சிறுவர்களுக்கான பூங்கா அமைத்தால் நன்றாக இருக்கும்.

பூங்காவில் விளையாட்டு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள் ஆகியவற்றை அமைத்து கொடுத்தால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே வெம்பக்கோட்டை அணையில் சிறுவர் பூங்கா அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News