செய்திகள்
கூடலூர் தவளமலை சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்
ராட்சத பாறைகள் உடைத்து அகற்றப்பட்டதால் கூடலூர் தவளமலை பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்:
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட தவளைமலை என்ற இடத்தில் ராட்சத பாறைகள் உள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதிலும் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலை துறையின் உயர் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து ராட்சத பாறைகளின் ஒரு பகுதியை உடைத்து அகற்ற முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக தவளைமலை பகுதியில் உள்ள ராட்சத பாறைகளை உடைத்து அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வந்தது.
இதனால் குறுகலாக காணப்பட்ட நிலையில் தற்போது சாலை அகலமாக உள்ளது. இதைத்தொடர்ந்து ராட்சத பாறைகள் உடைத்து அகற்றிய இடங்களில் 100 மீட்டர் தூரத்துக்கு புதியதாக சாலை அமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் கூறும்போது, தவளமலை பகுதியில் ராட்சத பாறைகள் இருந்ததால் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் வகையில் சாலை குறுகலாக இருந்தது.
தற்போது ராட்சத பாறைகள் உடைக்கப்பட்டதால் ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.