செய்திகள்
போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, வெங்கட்ராகவன் ஆகியோர் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சிறப்பு வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் முகப்பு விளக்குகளில் எல்.இ.டி. லைட் மற்றும் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்த கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 17 வாகனங்களுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக நுழைவு வரி செலுத்தாத கர்நாடக லாரி பறிமுதல் செய்யப்பட்டு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறப்பு வாகன சோதனை வருகிற 18-ந் தேதி இரவு வரை தொடரும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.