செய்திகள்
கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்:
பென்னாத்தூர் அருகே ஆராஞ்சி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது வயலில் வேலை செய்துவிட்டு வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் கால் கழுவுவதற்காக சென்றார். அப்போது கிணற்றில் தவறி விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கிணற்றில் குதித்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் நீச்சல் தெரியாததால் கிணற்றில் கிருஷ்ணசாமி மூழ்கிவிட்டார். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 15 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கிருஷ்ணசாமியை பிணமாக மீட்டனர்.
பின்னர் கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.