செய்திகள்
தூசி அருகே கிரேன் மோதி தொழிலாளி பலி
தூசி அருகே கிரேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
தூசி அருகே சோதியம்பாக்கம் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் பட்டாபிராமன் (வயது 65), கூலி தொழிலாளி. இவர் மாமண்டூர் கிராமத்திற்கு சைக்கிளில் வந்து மீண்டும் வீட்டுக்கு சென்றார். நரசமங்கலம் கூட்ரோட்டில் பின்னால் வந்த கிரேன் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் பட்டாபிராமன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பட்டாபிராமனின் மனைவி பாலகுஞ்சம்மாள் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.