கோவையில் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண் அடித்து விரட்டப்பட்டுள்ளார்- எல் முருகன் குற்றச்சாட்டு
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பா.ஜ.க.வின் அணி, பிரிவு பிரதிநிதிகள் மாநாடு நடந்தது. இதில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் பங்கேற்று பேசியதாவது:-
தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
பெண்களின் மத்தியில் பிரதமர் மோடியின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கின்ற பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர். ஆனால் தி.மு.க. போன்ற கட்சிகள் பொய் பிரசாரம் செய்து இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.
மருத்துவக் காப்பீட்டு திட்டம், முத்ரா திட்டம், தனிநபர் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றியை பெறுவதுடன் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக பா.ஜ.க இருக்கும்’’.
தி.மு.க.வால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் மு.க.ஸ்டாலிடம் கேள்வி கேட்ட பெண் அவர்களுடைய கட்சியினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.
தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து அடித்து விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது. வருகிற மே மாதம் தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம்.
வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வை புலம்பச் செய்துள்ளோம். வெற்றிவேல் யாத்திரை மூலம் தி.மு.க.வின் தூக்கம் தொலைந்து விட்டது.
தி.மு.க. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு தமிழகத்தில் எடுபடாது. தமிழக சட்டப் பேரவைக்கு பாஜ.க. கட்சியினர் எம்.எல்.ஏ.க்களாக செல்ல அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.