ஈரோடு ரங்கம்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உண்டியலை தூக்கி சென்ற கொள்ளையர்கள்
ஈரோடு:
ஈரோடு ரங்கம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் வளாகத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. இதில் பொதுமக்கள் காணிக்கையாக பணத்தை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இன்று புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு பூஜை செய்வதற்காக கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார்.
அப்போது கோவிலின் 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த சில்வர் உண்டியல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோவிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.10 ஆயிரம் வரை பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரியவில்லை.
இந்நிலையில் கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் அருகே உள்ள சடயம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள புதரில் கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். உண்டியல் கிடந்த இடம் அருகே ஒரு பையில் சில பண ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த கோவில் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சார்பில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் பழைய பாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன் சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அடுத்தடுத்து 2 சம்பவங்கள் நடந்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த 2 கொள்ளை சம்பவத்திலும் கோவிலைப் பற்றி நன்கு தெரிந்த நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.