செய்திகள்
கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் மாதர் சங்கத்தினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்

Published On 2020-12-21 07:46 IST   |   Update On 2020-12-21 07:46:00 IST
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் தெய்வானை, மாவட்ட துணைத்தலைவர் ரேணுகாதேவி, தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் நகர தலைவர் மைதிலி, நகர செயலாளர் மேரி, நகர பொருளாளர் பிரியா, துணைத்தலைவர் முத்துலட்சுமி, துணை செயலாளர் மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு முன்பாக விறகு அடுப்பு வைக்கப்பட்டு இருந்தது. .

அதன் அருகே 2 கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, அதன் முன்பு மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி கூறியதாவது:-

சமையல் கியாஸ் விலை உயர்வால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட கூடிய சூழ்நிலை உள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது. பெண்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி செல்லக்கூடிய நிலையை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News