செய்திகள்
காட்டு யானைகள் சேதப்படுத்திய மேரக்காய்களை காணலாம்.

குன்னூர் அருகே மேரக்காய் பயிரை சேதப்படுத்திய காட்டு யானைகள்

Published On 2020-12-17 13:36 IST   |   Update On 2020-12-17 13:36:00 IST
குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் மேரக்காய் பயிரை சேதப்படுத்தியது.
குன்னூர்:

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் செடிகள் வளர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் உணவு தேடி காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கோடேரி பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. அவற்றை வனத்துறையினர் துரத்தினர்.

பின்னர் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் குன்னூர் அருகேயுள்ள கிளிஞ்சடா பகுதியில் முகாமிட்டன. இந்த பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் மேரக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளனர்.

மேலும் இந்த பயிருக்கு பந்தல் அமைக்க வேண்டும் என்பதால் விவசாயி கள் அதிகளவில் செலவு செய்து பந்தலும் அமைத்து இருந்தனர். இந்த நிலையில் கிளிஞ்சடா பகுதியில் புகுந்த 5 காட்டுயானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த மேரக்காய்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுட்டது. அத்துடன் அங்குள்ள பந்தல்களையும் நாசம் செய்தன.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அதில் 3 விவசாயிகளின் தோட்டத்தில் மேரக்காய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News