செய்திகள்
சீல் வைக்கப்பட்ட தனியார் தேயிலை தொழிற்சாலையை காணலாம்

குன்னூர் அருகே தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு சீல்

Published On 2020-12-17 13:28 IST   |   Update On 2020-12-17 13:28:00 IST
குன்னூர் அருகே பராமரிப்பின்றி செயல்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
குன்னூர்:

குன்னூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் கிரைக்மோர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலை நிர்வாகத்திற்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த அறிவுரைகளை தனியார் தேயிலை தொழிற்சாலை பின்பற்றவில்லை என்று குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங்கிற்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரையின் பேரில் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் வருவாய் துறையினர் அந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுதேயிலை தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

இதுகுறித்து குன்னூர் சப்- கலெக்டர் ரஞ்சித்சிங் கூறியதாவது:-

கிரைக்மோர் பகுதியில உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலை சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் அறையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பு அறிவுரைகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. மேற்கண்ட காரணங்களால் தேயிலை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News