செய்திகள்
வந்தவாசியில் சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு பொதுமக்கள் போராட்டம்
சுடுகாட்டுக்கு செல்ல பாதைவசதி கேட்டு தாலுகா அலுவலகம் முன் பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராம காலனியில் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் யாராவது இறந்து விட்டால் உடலை முதல் தெருவில் இருந்து இரண்டாவது தெருவிற்கு போகும் வழியில் உள்ள புறம்போக்கு நிலம் வழியாக கிராம மக்கள் எடுத்துச் சென்று வந்தனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு புறம்போக்கு நிலத்தில் ஒருவருக்கு வீடு கட்டிக்கொள்ள இடம் ஒதுக்கி மீதி பாதையை மயான பாதையாக அனுபவித்து வந்தார்கள்.
தற்பொழுது இந்த புறம்போக்கு பாதையை ஒருவர் ஆக்கிரமித்து காலியாக இருந்த மயான பாதைக்கும் சேர்த்து பட்டா தயார்செய்து அந்த ஆக்கிரமிப்பு நபர் வேறு ஒருவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இறந்தவர் உடலை எடுத்துச் செல்வதில் பிரச்சினை எழுந்துள்ளது.
திருவிழாக்காலங்களில் அந்த வழியாக அம்மன் வீதி உலா வருவது வழக்கம்.அதுவும் தடைபட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பாதையை வாங்கியவர் முள்வேலியிட்டு அடைத்து விட்டார். அந்த பகுதியில் ஒருவர் இறந்து விட்டதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் ஊர்ப்பொதுமக்களில் சிலர் முள்வேலியை அகற்றியதையடுத்து இறந்தவர் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த சுடுகாட்டு பாதைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் எனக்கேட்டு வந்தவாசி தாலுகா அலுவலகத்திற்கு நேற்று வந்த பொதுமக்கள் அலுவலகத்துக்கு எதிரே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களுடன் துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். அவரிடம் மனு அளித்த பொதுமக்கள் அதன்பின் கலைந்து சென்றனர்.