செய்திகள்
ஆரணியில் பொது வழி தகராறில் தம்பியை தாக்கியவர் கைது
ஆரணியில் பொது வழி தகராறில் தம்பியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி கொசப்பாளையம் கோபால் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45). கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது தம்பி தியாகராஜன் (40) கார் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவர்களில் தியாகராஜன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் அண்ணன் -தம்பி இடையே தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு செல்லும் பொதுவழி தொடர்பாக பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கார்த்திகேயன் வீட்டுக்குச் செல்லும்போது வழியில் மோட்டார் சைக்கிளை தியாகராஜன் நிறுத்தி இருந்தார். அது குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தியாகராஜனை அங்கிருந்த இரும்புக்கம்பியால் கார்த்திகேயன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த தியாகராஜன் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து தம்பியைத் தாக்கிய அண்ணன் கார்த்திகேயனை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.