செய்திகள்
காரைக்கால் கீழகாசாகுடி கிராமத்தில் மின்சாரம் தாக்கி காவலாளி பலி
காரைக்கால் கீழகாசாகுடி கிராமத்தில் மின்சாரம் தாக்கி தனியார் தொழிற்சாலை காவலாளி பலியானார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காரைக்கால்:
காரைக்கால் கீழகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சந்தானசாமி (வயது 60). இவர் திருநள்ளாற்றில் உள்ள தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சந்தானசாமி வீட்டில் பழுதான மின்சாதனத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதபடி மின்சாரம் தாக்கி சந்தானசாமி தூக்கி எறியப்பட்டார். உடனே அவரது மகன் சேவியர்கவின் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தானசாமியை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். காவலாளி பலியானது குறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.