செய்திகள்
ஊட்டி படகு இல்லத்துக்கு புதிய படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.

சுற்றுலா பயணிகளை கவர புதிதாக 26 படகுகள்

Published On 2020-12-16 09:07 GMT   |   Update On 2020-12-16 09:07 GMT
படகு இல்லங்களில் சுற்றுலா பயணிகளை கவர புதிதாக 26 படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஊட்டி:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் ஆகிய சுற்றுலா தலங்கள் ஊரடங்கு தளர்வுக்கு பின் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த படியும், அணை மற்றும் ஏரியில் இதமான காலநிலையை அனுபவித்த படியும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள்.

ஊட்டி படகு இல்லத்தில் 40 மிதி படகுகள், 9 துடுப்பு படகுகள், 31 மோட்டார் படகுகள் உள்ளன. 8 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இங்கு 2 இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்ய ரூ.190, 4 இருக்கைகளுக்கு ரூ.290, 4 இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் சவாரி செய்ய ரூ.660, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.670, 10 இருக்கைகளுக்கு ரூ.810, 15 இருக்கைகளுக்கு ரூ.1,150 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

படகு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். படகு இல்லத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரவும், படகு சவாரி செய்வதை ஊக்குவிக்கவும் பல வடிவங்களில் புதிதாக 24 படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மயில், வாத்து, டிராகன் போன்ற உருவங்களில் வடிவமைக்கப்பட்ட மிதி படகுகள் வந்து உள்ளன.

அதேபோல் ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் 20 மோட்டார் படகுகள், 4 அதிவேக மோட்டார் படகுகள் சுற்றுலா பயணி களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அங்கு 8 இருக்கைகள் கொண்ட 2 மோட்டார் படகுகள் புதிதாக வரவழைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிதாக 50 படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் 26 படகுகள் வந்து உள்ளன. மீதமுள்ள 24 படகுகள் ஓரிரு நாட்களில் வந்துவிடும் என்றார்.
Tags:    

Similar News