செய்திகள்
விபத்து

களம்பூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலி

Published On 2020-12-15 14:36 GMT   |   Update On 2020-12-15 14:36 GMT
களம்பூர் அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி:

ஆரணி அருகே உள்ள களம்பூரையடுத்த கஸ்தம்பாடி குளத்து தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அய்யப்பன் (வயது 28). இவர் சென்னையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு போளூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆரணி கொசப்பாளையம் பங்களா தெருவைச் சேர்ந்த ராகவன் (54), போளூர் அருகே காந்தபாளையத்தில் உள்ள தனது நிலத்தை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

வடமாதிமங்கலம் கூட்ரோடு அருகே வந்தபோது இவர்களது மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் அய்யப்பனும், ராகவனும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது குறித்து களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அய்யப்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மற்றொருவரான ராகவனுக்கு ராணி என்ற மனைவியும், மோகனலஷ்மி என்ற மகளும், தனுஷ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். மோட்டார்சைக்கிள்கள் மோதலில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News