செய்திகள்
சஞ்ஜித்குமார்

கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவர் தற்கொலை

Published On 2020-12-15 10:31 GMT   |   Update On 2020-12-15 10:31 GMT
கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்ஜித்குமார் (வயது 17). இவர் கேர்க்கம்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பத்குமார் பல வருடங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

இதனால் சஞ்ஜித்குமார், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். தனது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து தனியாக வசித்து வருவதால், சஞ்ஜித்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வீட்டிற்கு சென்ற அவர், வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். அறைக்குள் சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாயார் லீலாவதி, அந்த அறையின் கதவை தட்டினார். ஆனால் திறக்கவில்லை.

பலமுறையும் கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சஞ்ஜித்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்ஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News