செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

பள்ளிக்கல்வி, வேளாண் இயக்குனர்களுடன் கிரண்பேடி ஆலோசனை

Published On 2020-12-11 07:51 IST   |   Update On 2020-12-11 07:51:00 IST
புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை, வேளாண் இயக்குனர்களுடன் கவர்னர் கிரண்பேடி காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

கவர்னர் கிரண்பேடி பல்வேறு துறை தலைவர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனர் ருத்ரகவுடு உடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பள்ளி முதல்வர், துணை முதல்வர்கள், விரிவுரையாளர்களுடன் அவ்வப்போது பள்ளிக்கல்வி இயக்குனர் கலந்துரையாடல் நடத்த வேண்டும். பள்ளிகளில் பெற்றோர், ஆசிரியர் சந்திப்பு கூட்டங்களை நடத்த வேண்டும். பள்ளி நிர்வாகம் சார்பில் படிப்பு முடிந்ததும் திரும்பத் தரும் வகையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தியுடன் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி அவர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

வேளாண் துறை செயல்முறையில் தொடர்ச்சியான நடைமுறையை உறுதிப்படுத்த சரியான தகவல் தொடர்பு உத்திகளை உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் தொடங்கி அனைத்து தேவையான தகவல்களையும், அரசு கொள்கை சார்ந்த விஷயங்களையும் விவசாயிகளுக்கு தெரிவிக்க குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வசதியை பயன்படுத்த உத்தரவிடப்பட்டது.

வேளாண்துறை இணையத்தளத்தில் விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் தமிழில் தகவல்கள் இருக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் வேளாண்துறையில் அதிகாரிகள், பணியாளர்கள் கலந்துரையாடல் அவசியம். விவசாயிகளை அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இவை அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News