செய்திகள்
தோப்புத்துறையில் வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தோப்புத்துறையில் வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தோப்புத்துறை மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் பெய்த தொடர் மழையால் பல்வேறு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மழைநீர் தேங்கினால் வடிய வைப்பதற்காக வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீரை வடியவைக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகரச்செயலாளர் அய்யப்பன், பொதுச்செயலாளர் ராஜேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி தோப்புத்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மேலாளர் மன்சூர், சுகாதார மேற்பார்வையாளர் கோமதிநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் வேதாரண்யம்-நாகை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.