செய்திகள்
விழாவில் அமைச்சர் கந்தசாமி பெண்களுக்கு தையல் உபகரணம் வழங்கியபோது எடுத்த படம்.

ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, தொழில் கடன் தள்ளுபடி- அமைச்சர் கந்தசாமி நம்பிக்கை

Published On 2020-12-09 20:06 IST   |   Update On 2020-12-09 20:06:00 IST
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், பெண்களுக்கான கல்வி, தொழில் கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.
பாகூர்:

கிருமாம்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில் புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறை சார்பில் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்து தையல் உபகரணங்களை வழங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் மலர் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடிவு செய்து சர்க்கரை ஆலை, பஞ்சாலைகளை திறக்க முயன்றோம். ஆனால் ஆலைகளை மூடி விடுங்கள் என கவர்னர் கூறிவிட்டார். கவர்னரை எதிர்த்து நாங்கள் ஒரு போராட்டமே நடத்தி வருறோம். ஆனால், அவர் ஒரு சதவீதம் கூட மாறவில்லை. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு குடிபெயர்ந்த காலம் போய், இங்கிருந்து பலரும் தமிழகத்துக்கு போகின்றனர். இதற்கு, கவர்னர் தான் காரணம்.

அரசு சார்பில் இலவச அரிசிக்குப் பதில் 5 மாதத்துக்கான பணம் தர கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அவர் 3 மாதத்திற்கு மட்டுமே அனுமதித்துள்ளார். அந்த தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மகளிர், மாற்றுத் திறனாளிகள் வாங்கிய கல்வி, தொழில் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். இதற்கு முதல்-அமைச்சர் சம்மதம் தெரிவிப்பார். இது தொடர்பான கோப்புகளை தயார் செய்து கவர்னரை சந்தித்து வழங்குவேன். அவர் ஒப்புதல் அளிக்கா விட்டால் மத்திய அரசிடம், மக்கள்படும் சிரமங்களை எடுத்துக்கூறி கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்துவோம்.

மத்திய அரசும் ஒப்புதல் வழங்கவில்லையென்றால் மக்களை திரட்டி போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News