செய்திகள்
நாகையில் 12 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
புரெவி புயல் வலுவிழந்து கடல் சீற்றம் குறைந்ததால் நாகையில் 12 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கடந்த 23-ந் தேதி நாகை துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து புயல் தீவிரம் அடைந்ததால் 8-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நிவர் புயல் உருவானதில் இருந்து நாகையில் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து புயல் கரையை கடந்த பிறகு 3 நாட்டிக்கல் தூரம் மட்டும் சென்று மீன்பிடிக்க பைபர் படகு மீனவர்களுக்கு மீன்வளத்துறையினர் அனுமதி அளித்தனர்.
இதை தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் காரணமாக நாகையில் மீண்டும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் துறைமுக அலுவலகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் புரெவி புயல் வலுவிழந்ததால் கடல் சீற்றமும் குறைந்தது. இதையடுத்து 12 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றும் பணியில் மீன்பிடி தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் தங்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றையும் விசைப்படகுகளில் ஏற்றி தயார் நிலையில் வைத்துள்ளனர்.