செய்திகள்
ஏரியின் மதகு உடைந்து 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது
திருவண்ணாமலை அருகே கடந்தசில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரியின் மதகு உடைந்து 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
கலசபாக்கம்:
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்பாலனந்தல் கிராமத்தில் உள்ள தென்னாந்தல் ஏரி மதகு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்தசில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நேற்று மாலை திடீரென ஏரியின் மதகு வழியில் உடைப்பு ஏற்பட்டு, ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற தொடங்கியது. இதனால் ஏரி அருகே உள்ள பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரசு அதிகாரிகள் விரைந்து வந்து, ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.