செய்திகள்
ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் பெரியசேமூர் பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற, சின்னசேமூர் சிவசக்திநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது 38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் ஈரோடு சூரம்பட்டி ஜெகநாதன் காலனி பகுதியில் நின்று கொண்டு லாட்டரி சீட்டு விற்ற ஈரோடு மஜித்வீதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை ஈரோடு சூரம்பட்டி போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.