செய்திகள்
ஈரோடு அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
ஈரோடு அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் நல்லசாமி (வயது 33). திருமணம் ஆகாதவர். இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் சரிவர செயல்படவில்லை. இதனால் அவர் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களுக்கு உதவியாக வேலை செய்து வந்தார்.
திருமணம் ஆகாததாலும், பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்ததாலும் நல்லசாமி மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நல்லசாமி நேற்று இறந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.