செய்திகள்
முன்விரோதத்தில் பட்டதாரி பெண் மீது தாக்குதல்- பக்கத்து வீட்டு பெண் கைது
நாகை அருகே முன்விரோத தகராறில் பட்டதாரி பெண்ணை தாக்கிய பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டார்.
சிக்கல்:
நாகை அருகே சிக்கல் பனைமேடு காலனி தெருவில் வசித்து வருபவர் சாகுல்அமீது. இவரது மகள் தாரணி(வயது20). இவர் கல்லூரியில் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணிமாறன் மனைவி சித்ரா(42). இவர்கள் இரு குடும்பத்தினர் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்க தாரணி, சித்ரா ஆகியோர் சென்றனர். அப்போது சித்ரா, தாரணியை திட்டினார்.
பின்னர் தாரணி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது சித்ரா மீண்டும் திட்டியதுடன் தாரணியை தலையில் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தாரணி மண்எண்ணெய்யை எடுத்து குடித்துள்ளார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தாரணியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.