செய்திகள்
கோப்பு படம்.

நாகூரில் பெண் தூய்மைப்பணியாளருக்கு அரிவாள் வெட்டு

Published On 2020-11-05 15:30 IST   |   Update On 2020-11-05 15:30:00 IST
நாகூரில் பெண் தூய்மைப்பணியாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்:

நாகையை அடுத்த நாகூர் காட்டுநாயக்கன் தெருவில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி (வயது52). இவர் நாகை நகராட்சியில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை நாகூர் சிவன் மேலவீதியில் குப்பை அள்ளுவதற்காக மலர்கொடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், மலர்கொடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மலர்கொடியை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த மலர்கொடியை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்கொடியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News