செய்திகள்
கோப்புபடம்

கடலூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகை - 35 பேர் கைது

Published On 2020-11-03 13:51 IST   |   Update On 2020-11-03 13:51:00 IST
கடலூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்ற பெயரில் 50 சதவீத ஒப்பந்த ஊழியர்கள் ஊதியமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தொழிலாளர் நல அலுவலரின் வழிகாட்டல், நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிர்வாகத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். சம்பள பாக்கி மற்றும் போனஸ் பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ந் தேதி (அதாவது நேற்று) முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து, பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கடலூர் மாவட்டத்தில் சுமார் 400 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வந்துள்ள நிலையில் தற்போது 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் ஊழியர்கள் கே.டி.சம்பந்தம், குழந்தை நாதன், விஜய்ஆனந்த், குருபிரசாத், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், சி.ஐ.டி.யு. சுப்புராயன், என்.இ.டி.இ.சி.எல். ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News