செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்பேரில் சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர், நகர்ப்பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா? என்றும், பொதுமக்கள் முககவசம் அணிந்து வெளியில் வருகின்றனரா? என்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளி பின்பற்றாத மற்றும் முககவசம் அணியாத கடைக்காரர்களிடம் தலா ரூ.500 வீதமும், சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாத தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் 15 ஆயிரத்து 100 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத், பீட்டர், காளமுத்து மற்றும் குழுவினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.