செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
ஜெயங்கொண்டம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மற்றும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நகர்ப்பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா? என்றும், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வீட்டில் இருந்து வெளியில் வருகின்றனரா? என்றும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைவீதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.1,200-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் முக கவசம் அணியாதது தொடர்பாக 12 கடைக்காரர்களிடம் தலா ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரமும், சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாதது தொடர்பாக வணிக நிறுவனம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.12 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தப்பட்டது. ஆய்வின்போது நகராட்சி பணியாளர்கள் பாண்டியன், சம்பத், பீட்டர் மற்றும் குழுவினர் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.