செய்திகள்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்
வேலூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூரை அடுத்த மலைக்கோடி, விஸ்வநாதன்நகர், அண்ணாநகர், சரஸ்வதிநகரில் பல ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கடந்த 4 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பல்வேறு அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும், இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே அந்த பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேலூர் மாநகரம் சார்பில் காத்திருப்பு போராட்டம் வேலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகர குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சரோஜா, புஷ்பராஜ், வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ. லதா, மாநகர செயலாளர் சிம்புதேவன், மாவட்டக்குழு உறுப்பினர் காவேரி உள்பட பலர் கலந்துகொண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பேசினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வேலூர் தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பான ஆவணங்களை அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தாசில்தார் தெரிவித்தார். அதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.