செய்திகள்
நகை திருட்டு

ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Published On 2020-10-26 09:38 GMT   |   Update On 2020-10-26 09:38 GMT
ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் ராஜாதெருவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 68). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி தனது மகள் சண்முகபிரியாவை பார்ப்பதற்காக தனசேகரன், தனது மனைவி தமிழரசியுடன் காரைக்கால் சென்று விட்டார்.

பின்னர் 22-ந்தேதி இரவு 7.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் அறையில் மின்விளக்கு எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவுக்கு அருகில் சென்று பார்த்த போது வாசலில் இரும்பு கதவு மற்றும் வீட்டின் மற்ற கதவுகளும் திறந்து கிடந்தன. அருகில் சென்று பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இதுகுறித்து திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து நாகப்பட்டினத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை மேற்கொண்டனர். நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News