செய்திகள்
கோப்புபடம்

திருவண்ணாமலை அருகே 5 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு

Published On 2020-10-23 12:35 GMT   |   Update On 2020-10-23 12:35 GMT
திருவண்ணாமலை அருகே 5 கோவில்களில் உண்டியல் உடைத்து பணம், நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே உள்ள நூக்காம்பாடி கிராமத்தில் முருகன் கோவில், பச்சையம்மன் கோவில், அய்யப்பன் கோவில், படவேட்டம்மன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில் ஆகிய 5 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜைகள் முடித்து விட்டு கோவில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றனர்.

இதையடுத்து அந்த 5 கோவில்களிலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கோவில்களில் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணம் மற்றும் நகைளை திருடி சென்று உள்ளனர்.

நேற்று காலையில் கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் 5 கோவில்களிலும் நடந்த திருட்டு சம்பவத்தில் 6 கிராம் தங்கம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் மர்ம நபர்களால் திருடப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News