செய்திகள்
குடியாத்தம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
குடியாத்தம் அருகே மனைவி குடும்பம் நடத்த வராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த ராஜாகோயில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ராம்கி (வயது 27), தச்சுத்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி லட்சுமி, 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 9 மாதங்களுக்கு முன்பு ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவரை ராம்கி 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கணவரிடம் கோபித்துக் கொண்டு காயத்ரி தனது தாய் வீட்டு சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த ராம்கி கடந்தசில நாட்களுக்கு முன்பு விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் ராம்கி, காயத்ரிக்கு போன் செய்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் காயத்ரியின் பெற்றோரும் ராம்கியை போனில் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராம்கி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.