செய்திகள்
கைது

பூண்டு, வெங்காயம் விற்பது போல் வீடுகளுக்குள் புகுந்து திருடிய 5 பேர் கைது

Published On 2020-10-22 08:27 GMT   |   Update On 2020-10-22 08:27 GMT
பூண்டு, வெங்காயம் விற்பது போல் வீடுகளுக்குள் புகுந்து திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபாத்:

வாலாஜாபாத் பேரூராட்சி வல்லப்பாக்கம் பகுதியில் கடந்த வாரம் தனியாக இருந்த முதியோர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து 6 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை வாகனத்தில் வைத்து விற்பனை செய்து வந்தவர்களை வாலாஜாபாத் போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் பகல் நேரங்களில் வாகனத்தில் பூண்டு, வெங்காயத்தை விற்பனை செய்தவாறு ஒதுக்குபுறமான வீடுகளையும், முதியோர்கள் தனியாக இருக்கும் வீடுகளை கண்காணித்து இரவு நேரங்களில் அந்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து செல்லும் அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் தெரிவித்தனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு கிராமத்தை சேர்ந்த கோட்டியப்பன் (வயது 55), அவரது மனைவி அரசி (45), மகன் சந்தோஷ் குமார் (24), மைத்துனர் ரஞ்சித்குமார் (23), மருமகள் துர்காதேவி (29) உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து மினி லாரியை போலீசார் கைப்பற்றினர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 5 பேரையும் போலீசார் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News