செய்திகள்
கொரோனா வைரஸ்

மருத்துவ ‘சீட்’ மோசடி வழக்கில் கைதான பாதிரியாருக்கு கொரோனா

Published On 2020-10-22 07:42 IST   |   Update On 2020-10-22 07:42:00 IST
மருத்துவ ‘சீட்’ மோசடி வழக்கில் கைதான பாதிரியாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
வேலூர்:

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் சீனிவாசன். ஓய்வு பெற்ற அரசு என்ஜினீயர். இவரது மகனுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக பாதிரியார் சாது சத்தியராஜ் உள்பட 3 பேர் தெரிவித்தனர். இதற்காக சீனிவாசனிடம் இருந்து ரூ.57 லட்சம் வரை பணம் பெற்றதாக தெரிகிறது.

ஆனால் சீனிவாசன் மகனுக்கு சீட் வாங்கி கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பாதிரியார் சாது சத்தியராஜ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.

தற்போதைய கொரோனா பாதுகாப்பு நடைமுறையின் படி சாதுசத்தியராஜுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது. உடனே அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட இன்ஸ்பெக்டர் இலக்குவன் உள்பட 6 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


Similar News