செய்திகள்
தற்கொலை

ஓசூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-10-20 06:22 GMT   |   Update On 2020-10-20 06:22 GMT
ஓசூரில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் தின்னூர் ஜீவா நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் வள்ளீஸ்வரி (வயது 22). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கர்ப்பமான வள்ளீஸ்வரி, பிரசவத்திற்காக ஓசூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தந்தை வீட்டில் இருந்து வந்த வள்ளீஸ்வரி, தனது பெற்றோரிடம் குழந்தைக்கு நகை போடும் படி கூறியதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் தற்போது முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வள்ளீஸ்வரி, விஷத்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளியும் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News