செய்திகள்
நாகூரில் சாராயம் கடத்திய 3 பேர் கைது- மோட்டார் சைக்கிள் பறிமுதல்
நாகூரில் சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நாகூர்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தல்படி, சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகூரை அடுத்த கொட்டராக்குடியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கொட்டராக்குடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 22), நாகை பெரிய சன்னமங்களம் பகுதியை சேர்ந்த வீரமணி (65) ஆகியோர் என்பதும், சாராயம் கடத்தி வந்து விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், வீரமணி ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 220 லிட்டர் பாக்கெட் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நாகூர் கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரைக்காலில் இருந்து நாகை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்பன் ரவி (44) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செல்லப்பன் ரவியை கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.