செய்திகள்
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் திருமாநிலையூரை சேர்ந்தவர் பாரதிதாசன் (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் பாரதிதாசன் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பாரதிதாசனின் மோட்டார் சைக்கிளை திருடியது பெரியகுளத்தூர் பாளையத்தை சேர்ந்த கவுதமன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து கவுதமனை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.