செய்திகள்
கோப்புபடம்

சேலம் அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

Published On 2020-10-12 09:16 GMT   |   Update On 2020-10-12 09:16 GMT
சேலத்தில் லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் முரளி (வயது 50). லாரி டிரைவர். அரிசிபாளையத்தை சேர்ந்தவர்கள் ராமன் (40), ராஜசேகர் (42). சுமைதூக்கும் தொழிலாளிகள். இந்தநிலையில் சத்திரம் பகுதியில் இருந்து லாரியில் விறகு ஏற்றிக்கொண்டு சிவதாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். கந்தம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த வழியாக செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாக இருந்து உள்ளது. இதனால் மின்சார கம்பி உரசாமல் இருப்பதற்காக லாரியை டிரைவர் முரளி நிறுத்தினார். மூங்கில் குச்சி மூலம் தொழிலாளி ராஜசேகர் மின்கம்பியை மேலே தூக்கினார். லேசாக நிலைத்தடுமாறியபோது திடீரென்று மின்கம்பி லாரியில் விழுந்தது

அப்போது லாரியின் பக்கவாட்டு கம்பியை பிடித்துக்கொண்டிருந்த ராமன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் முரளி மற்றும் தொழிலாளி ராஜசேகர் ஆகியோர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மின்சார ஊழியர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.

ராமன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

Tags:    

Similar News