செய்திகள்
தற்கொலை

ஈரோட்டில் கடன் தொல்லையால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-10-10 18:18 IST   |   Update On 2020-10-10 18:18:00 IST
ஈரோட்டில் கடன் தொல்லையால் தொழில் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

ஈரோடு வைராபாளையம் நேதாஜி வீதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). தொழில் அதிபரான இவர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் சொந்தமாக ஜவுளிக்கடை வைத்து நடத்தி வந்தார். இதற்காக சரவணன் பலரிடம் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. கொரோனா ஊரடங்கால் ஜவுளி வியாபாரம் சரியாக இல்லாததால் சரவணனால் வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரவணன் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் சரவணன் விஷம் குடித்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி ரத்னா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News