செய்திகள்
தற்கொலை

செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-10 08:19 GMT   |   Update On 2020-10-10 08:19 GMT
சேலத்தில், செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:

சேலம் அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவை சேர்ந்தவர் பழனிவேலு. இவருடைய மனைவி ஜெயா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் கடைசி மகளான கலைவாணி (வயது 17) என்பவர் நஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பழனிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். ஜெயா துணிகள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்பு நடப்பதால் கலைவாணிக்கு அவருடைய பெரியப்பா பாலசுப்பிரமணி செல்போன் ஒன்று வாங்கி கொடுத்தார். ஆனால் கலைவாணி, ஆன்லைன் வகுப்புகளை தவிர பிற நேரங்களிலும் செல்போனில் வாட்ஸ் அப்பில் பதிவிடுதல், பேசுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

இதனால் மனமுடைந்த கலைவாணி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News