செய்திகள்
கைது

பெண்கள் உள்பட 4 பேருக்கு கத்தி குத்து- வாலிபர் கைது

Published On 2020-10-09 10:46 GMT   |   Update On 2020-10-09 10:46 GMT
முன்விரோதம் காரணமாக பெண்கள் உள்பட 4 பேரை கத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு மோசிக்கீரனார் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 46). இவர் ஈரோடு வ.உ.சி. பூங்கா தற்காலிக மார்க்கெட்டில் கருவேப்பிலை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது அண்ணன் சரவணன் (50). இவரும் ரங்கசாமி கடையின் அருகிலேயே கருவேப்பிலை கடை வைத்துள்ளார்.

ரங்கசாமி தனது தாய் வீராயி (65), மனைவி காவேரி (37), மகள் யோகேஸ்வரி (20) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். சரவணன் அவரது குடும்பத்தினருடன் கருங்கல்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். ரங்கசாமிக்கும், சரவணனுக்கும் இடையே தொழில்போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ரங்கசாமி, சரவணனை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சரவணனின் மகன் தமிழ்வாணன் (23), ரங்கசாமியின் வீட்டிற்கு சென்று, வீராயி, காவேரி, யோகேஸ்வரி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தமிழ்வாணன் தான் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து வீராயியையும், காவேரியையும் சரமாரியாக உடலில் குத்தினார். இதைப்பார்த்து தடுக்க வந்த யோகேஸ்வரி மற்றும் ரங்கசாமிக்கும் கத்தி குத்து விழுந்தது. பின்னர் தமிழ்வாணன் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், காயம் அடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனை கைது செய்தனர்.

Tags:    

Similar News