செய்திகள்
பிரவீன் - ரஞ்சித்

கூடலூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர்கள் உயிரிழப்பு

Published On 2020-10-09 07:50 GMT   |   Update On 2020-10-09 07:50 GMT
கூடலூர் அருகே லாரி மோட்டார் சைக்கிள் மோதி 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:

கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனுமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தம்பா. இவரது மகன் ரஞ்சித் (வயது 24). அதே பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் பிரவீன் (22). 2 பேரும் நண்பர்கள் ஆவர். மேலும் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் ரஞ்சித், பிரவீன் ஆகியோர் நடுவட்டம் சென்றனர். மோட்டார் சைக்கிளை ரஞ்சித் ஓட்டினார்.

பின்னர் நடுவட்டம் சென்று விட்டு இரவு 9 மணி அளவில் அனுமாபுரம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஊட்டியில் இருந்து கேரட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் வழியாக கேரளாவுக்கு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை தலைகுந்தா பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (55) என்பவர் ஓட்டினார். லாரி அனுமாபுரம் பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித் மற்றும் பிரவீன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த பிரவீனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News