செய்திகள்
ஈரோடு அருகே வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்- புதுமாப்பிள்ளை பலி
வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் திருமணம் ஆன 40 நாளில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே உள்ள குருமனைக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ் (வயது 29). இவருக்கும், சவுமியா (26) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான ஜெகதீஸ் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெகதீஸ் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறையில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேன் இவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து ஜெகதீஸ் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று ஜெகதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெகதீசின் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் ஹரிபிரசாத் (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.