செய்திகள்
தீ விபத்து

அமைந்தகரையில் தனியார் அலுவலகத்தில் தீ விபத்து- 30 கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்

Published On 2020-10-08 17:20 IST   |   Update On 2020-10-08 17:20:00 IST
அமைந்தகரையில் 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் 5-வது மாடியில் உள்ள தனியார் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30 கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.
பூந்தமல்லி:

சென்னை அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள 8 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் 5-வது மாடியில் தனியாருக்கு சொந்தமான ஏற்றுமதி நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது.

நேற்று காலை இந்த அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 5-வது மாடியில் உள்ள அலுவலகத்தில் எரிந்த தீயை சுமார் ஒருமணி நேரமாக போராடி அணைத்தனர்.

எனினும் தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், ஏ.சி. எந்திரம், மேஜை, நாற்காலிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதாலும், காலை நேரத்தில் அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்மநபர்கள் தீ வைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News