செய்திகள்
தாளவாடி அருகே யானை தாக்கி மாணவன் பலி
தாளவாடி அருகே யானை தாக்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் வனச்சரகத்துக்கு உள்பட்டது பூதாளபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 10 பேர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள காரையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் பள்ளிக்கூட மாணவனான சிவமூர்த்தி, என்பவரது மகன் ஜடேருத்ராவும் (வயது 13) சென்றான்.
ஜடேருத்ரா மட்டும் தனியாக முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தான். மற்றவர்கள் அவனது பின்னால் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வந்த யானை, ஜடேருத்ராவை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியுள்ளது. பின்னர் அவனது தலையில் காலால் மிதித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் படுகாயம் அடைந்த ஜடேருத்ரா பரிதாபமாக இறந்தான்.
இதை பார்த்த அவனுடன் வந்தவர்கள் உடனே கேர்மாளம் வனத்துறை மற்றும் ஆசனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பிணத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.