செய்திகள்
கோப்புபடம்

பெருந்துறை அருகே நூதன முறையில் கேமராக்களை திருடிய வாலிபர் கைது

Published On 2020-10-08 14:41 IST   |   Update On 2020-10-08 14:41:00 IST
பெருந்துறை அருகே நூதன முறையில் கேமராக்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று பெருந்துறை பழைய பஸ் நிலையம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள செல்போன் கடை அருகே கையில் கருப்பு கலர் பையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவரிடம் சென்று அவர் வைத்திருந்த பையை வாங்கி திறந்து சோதனை செய்தனர். அதில் 2 வீடியோ கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் விசாரித்தபோது, ஓ.எல்.எக்ஸ். தகவல் பரிமாற்றம் மூலம், கேமராக்களை வாங்குவதாக கூறி உரிமையாளர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து நைசாக திருடிச்சென்றதும் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம், தாழையூத்து, வடக்கு பள்ளிவாசல் வீதியைச்சேர்ந்த முகமது அப்துல் சலீம் மகன் பீர் ரிஸ்வான் ஹாசன் (வயது 33) என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் ஈரோடு மற்றும் கோவையில் இருந்து திருடிக்கொண்டு வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 வீடியோ கேமராக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News