செய்திகள்
கோப்புபடம்

அந்தியூர் தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி நர்ஸ் பலி

Published On 2020-10-05 13:09 IST   |   Update On 2020-10-05 13:09:00 IST
அந்தியூர் அருகே தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி நர்ஸ் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர்:

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகள் விஜயகுமாரி (வயது 26). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி இருந்து நர்சாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் டாக்டர் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை பூட்டி கிடந்தது. இதனால் நர்ஸ் விஜயகுமாரிக்கு டாக்டர் போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்து, விஜயகுமாரி தங்கியிருக்கும் அறைக்கு சென்று அவர் பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் டாக்டர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு குளியலறையில் விஜயகுமாரி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘குளிப்பதற்காக குளியலறைக்கு சென்ற விஜயகுமாரி ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி அவர் இறந்தது,’ தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News